Tuesday, October 30, 2012

தொடர்கதை...

அம்மா,
விளையாட்டாய்
நான் கலைத்த
உன் பல நாள்
தூக்கங்களின்
விலை மதிப்பை

உணருகின்றேன்.....
கண்ணயர்ந்து தூங்குகையில்
என் கண்ணிமையைத்
திறந்து பார்க்கு மென்
கண்மணி யின்
குறும்பு தன்னில்!!!!!

Thursday, July 19, 2012

அவள்



பெண்ணின் பெருமையை உணர்வோம்- இந்த
மண்ணுலக மவளை மதித்திட செய்வோம்

செல்வத்தில் சிறந்த செல்வம்- அது
கள்ளம் கபட மிலா பிள்ளைச் செல்வம்
மழலை இல்லா மனிதன் வாழ்வில்
மகளாய்ப் பிறந்து மனமகிழ்  வளிப்பாள்

தனிமையும் வெறுமையும் சூழ்ந்து- ஒரு
துணையின்றி வாடும் ஆடவன் வாழ்வில்
இனிமையும் இன்பமும் சேர்க்கும்- நல்
துணையாய் வந்து துயரங்கள் களைவாள்

பொன்னையும் பொருளையும்  வேண்டி- பெரும்
போர்க்களம் செய்திடும் வையக மதனில்
தன்னலம் துளியும் இல்லா- ஒரு
அன்னையாய் அன்பினை அள்ளித் தருவாள்

அண்டத்தில் சிறந்தவள் பெண்ணே
அன்பினை வளர்ப்பவள் பெண்ணே
மங்கையை வணங்கிக் காத்தால்
வையகம் சென்றிடும் முன்னே...

Monday, February 27, 2012

கோரிக்கை

ஆண்டாண்டு
காலங்கள்
அகிலத்தில்
வாழ்ந்திட
அகவையை
வேண்டவில்லை
அரைநொடி
வாழினும்
அதுவரை
நீடிக்கும்
அமைதியை
வேண்டுகின்றேன்!!!