Sunday, June 18, 2017

சித்தி

தன் கருவில் சுமக்காவிடினும்
தமக்கை பெற்ற மகவு தம்மை
இமைக்குள் வைத்து பாதுகாத்து
இன்பமுறும் மற்றோர் அன்னை !!

அப்பா

ஐயிரண்டு திங்கள் 
அடிவயிற்றில் சுமந்தவள் 
அன்னை யாகினும் ...
அகிலத்தில் 
தன்னைவிட 
உயர்ந்த இடத்தைத் 
தம் பிள்ளைகள் 
அடைய வேண்டுமென 
அன்றாடம் அவர்களை 
இரு தோள்கள் மேலே 
சுமப்பவர் தந்தை யாவார்...

Wednesday, June 14, 2017

குறட்டை




எவ்வளவு சத்தமாக ஒலித்த பொழுதும்
தனது செவிகளைத் துளைக்காமல்
அடுத்தவர் உறக்கத்தை மட்டும்
குறிபார்த்துக் கெடுக்கும் ஆயுதம்....



Thursday, June 1, 2017

கருவில் தொலைந்த குழந்தை

12 May 2018 அன்று வெளிவந்த தினமணி கவிதைமணி  இதழில்  இந்த கவிதை வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது





"அந்த மூன்று நாட்கள்"
வந்திடத் தவறிய
 நாள் முதல் ....
ஆணோ ? பெண்ணோ?
அழகதன்  உருவோ
கறுப்போ? சிகப்போ?
கார்வண்ணன் நிறமோ ..

என்னைப் போலப்   பிறக்குமோ ?
"அவர்"- ஐப் போல இருக்குமோ ?

இருவருடைய  சாயலையும் ...
இணைத்துக்கொண்டு உதிக்குமோ??

அத்தை போல சிரிக்குமோ?
மாமன் போல முறைக்குமோ ?
சித்தி போல சிணுங்குமோ ?
தத்தை போல மொழியுமோ ?

என்று ஆசைப் பைஞ்சுதை மேல்
அன்புமனக் கற்களினால்
ஆகயாக் கோட்டையொன்றை
ஆவலுடன் கட்டி வைக்க…

என் உயிர்நிலையின் வாயிலாக
உயிரே..
ஓர்நாள்..
உனைப் பற்றிய
கனவுகள் அத்தனையும் 
உதிரமாக வழிந்தத (டி/ டா ) !!!!

மாளாத்துய ரென்று
மண்ணினிலே எதுவுமில்லை !!!
தீராக்கதை யொன்றை
தரணி யதும் கேட்டதில்லை!!!

ஆதலால்
"அம்மா" என்றழைத்து எந்தன்
"பெண்மை" யதை  நிறைவு செய்யப்
போன பாதை வழி யென்னிடம்
அதிவிரைவில் திரும்புவா யென்றென்
அடி வயிற்றின் மீதினிலே விழிவைத்துக் 
காத்துக் கிடக்கின்றேன்…..
மீண்டும்,
"அந்த மூன்று நாட்கள்"
வந்திதத் தவறிடும் நாளது  
வரும் வரையில் !!!!