Sunday, June 3, 2018

என்றும் என் இதயத்தில்

27th May 2018 அன்று வெளிவந்த தினமணி கவிதைமணி  இதழில்  இந்த கவிதை வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


சில நேரம் சண்டைகள்
சில நேரம் ஊடல்கள்;
கலையாத காதலுடன்
விளையாடும் தருணங்கள்..

தொலைதூரம் சென்றாலும்
துணையாகும் நினைவுகள்;
அருகாமை வந்தவுடன்
அழகாகும் தருணங்கள்...

மௌனத்தில் முத்தங்கள்
முத்தத்தின் சத்தங்கள்...
மொழியேதும் இல்லாமல்
உரையாடும் நிமிடங்கள்;

மதுவுண்ட மயக்கத்தில்
மலர்மீது இளைப்பாறும்
சிறுவண்டு அதுபோலுன்
மடிமீது தூக்கங்கள்...

மாற்றமே வையகத்தில்
நிரந்தரம் எனும் நியதி
ஏற்றமும் தாழ்மையும்
வாழ்க்கையின் ஒரு பகுதி;

ஆண்டுகள் உருண்டோடும்
அகவையும் பல கூடும்
இளமையும் முதுமையாய்
மாறும்நாள் வரக்கூடும்

எதுவந்த போதிலும்
எவர்சென்ற போதிலும்
விதிநமக்குப் பலவற்றை
வினைத்திட்ட போதிலும்

வென்றாலும் தோற்றாலும்
கொன்றாலும் எந்நாளும்
குன்றாத அன்புடைய
அன்றிலின் காதல்போல்

என்றும் என் இதயத்தில்
இன்று போல் நீங்காமல்
துடிப்பாக நீயும் - உன்
துணையாக நானும் ...


No comments:

Post a Comment