Saturday, August 18, 2018

வெல்லும் சொல்

11th June 2018 அன்று வெளிவந்த தினமணி கவிதைமணி  இதழில்  இந்த கவிதை வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

உள்ளத்தில் விடம்கொண்டு 
உதட்டினில் மதுக்கொண்டு 
கள்ளத்தனம் கலந்து
மொழிந்திடும் மனிதருள்;
வெள்ளை மனத்தோடு 
எள்ளளவும் வன்மமின்றி 
பிள்ளை நீ சொல்லும் சொல்
பேரின்பம் நல்கும் சொல்...

இதயத்தில் கனிவன்பும் 
இதழ்களில் பணிவன்பும் 
எவர் மனமும் நோகாத 
இனிமையும் மென்மையும்.. 
அமுதமே வார்த்தைகளாய் 
அழகாய் நீ விளம்பும் சொல் 
அனைவரின் மனங்களையும் 
அக்கணமே வெல்லும் சொல் 

பிள்ளை உன் சொல்லாலே 
உள்ளமும் குளிருதே 
கல்லதும் கரையுதே 
கடவுளும் மகிழுதே 
எல்லையில்லா இன்பம் 
என்னுள்ளே நிரம்புதே 
கொள்ளை கொண்டென்மனம் 
உன் வசம் திரும்புதே 

குழலோசை சுவைகுன்றும்
குயிலோசை செவிவெறுக்கும்  
உன் குரலோசை அதன்முன்னால் 
கிளி தோற்றுத் தலை குனியும் 
அழுகையும் சிரிப்பாகும்
பிழைகளும் கவியாகும் 
குழவி உன்மொழி கேட்டால் -மனக் 
குறைகளும் மறைந்தோடும்!!!!

                                         

No comments:

Post a Comment